மார்கழியில் அதிகாலை குளித்து வாசலில் கோலம் போட, அற்புத ஆரோக்கியமும், தெய்வ அருளும் கிடைக்கும்.. .
மாதங்களில் மிகவும் உயர்ந்தது மார்கழி . அதனால்தான், ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்!’ என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறியிருக்கிறார். மேலும் அவரே, கீதையில் "மார்கழி மாதத்தை தேவர்களின் மாதம்" என்று சொல்கிறார்.
மார்கழி முப்பது நாட்களும் பாவை நோம்பு விரதம் இருந்துதான் ஆண்டாள், பெருமாளுடன் இணைந்து கொண்டாள். அவள் அணிந்து அழகு பார்த்து தந்த பூ மாலையை பெருமாள் ஆனந்தமாக அணிந்துகொண்டார். இன்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் அம்மனுக்கு சாற்றி பூஜை செய்த மலர்மாலை ஆகாய விமானம் மூலம் திருமலைக்கு கொண்டுவரப்பட்டு, திருப்பதி ஏழுமலையானுக்கு அணிவிக்க படுகிறது. இதிலிருந்தே அந்த மாதத்தின் பெருமையையும், பாவை நோம்பின் பெருமையையும் உணரலாம்.
எல்லா கஷ்டங்களும் நீங்கி வரும் தைத் திங்களில் இருந்து புது வாழ்க்கை அமைய வேண்டும் என இந்த மாதம் பிரார்த்திக்கப்படுகிறது.
அதிகாலை எழுந்து கோலம் இட்டு அதில் சாணத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து கோலத்தை பூக்களால் அலங்கரித்து மார்கழியை வரவேற்கிறோம்.
ஆடியில் அம்மனும், புரட்டாசியில் பெருமாளும், மார்கழியில் அனைத்து தெய்வங்களும் என, மாதத்துக்கு ஒரு தெய்வம் என வழிபட வகுத்துள்ளார்கள் நம் முன்னோர்கள்
மார்கழி மாதத்தில் ஓசோன் படலமானது, பூமிக்கு மிக அருகில் உள்ளது. எனவே சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாடு இம்மாதத்தில் மேற்கொள்ளப்படுகிறது இது நம் வியாதிகளைக் கட்டுப்படுத்தும் என்பதால்தான் மார்கழி அதிகாலையில் பெண்கள் எழுந்து சாணம் தெளித்து கோலம் இட்டார்கள். ஆண்கள் அதிகாலையிலே தெய்வ நாம சங்கீர்தன பஜனை செய்தபடி வீதிகளில் வலம் வந்தார்கள். முன்னோர்கள் செய்த பல நற்செயல்களில், நாகரீகம் என்ற பெயரில் நாம் மறந்து, மறுத்துவிட்ட இவைகள் முக்கியமானவை.
நம் உடலில் 80% ஆக்சிஜனும் 20% கரியமில வாயுவும் இருக்க வேண்டும். தவறான பழக்க வழக்கங்களால் கூடுதலாகிவிட்ட விஷவாயுவான கார்பன்-டை-ஆக்ஸைடை விரட்டி ஆக்சிஜனை நம் உடல் பெறுவதால் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் பெருகி நோய் எதிர்ப்பு சக்தி உருவாகிறது.
இந்த நல்ல வாயுவை சுவாசிக்கும் பொருட்டே அதிகாலை மார்கழியில் எழுவது என்பதை தெய்வத்தின் பெயரால் நம் முன்னோர்கள் கட்டாயப்படுத்தி வைத்துள்ளனர்.
மேலும், மழையினால் உணவுக்கு வழியின்றி இரவு முழுவதும் அடைந்து கிடக்கும் சிறு உயிரினங்கள் அதிகாலையில் வெளிவந்து தமக்குத் தேவையான உணவாக அரிசி மாவைத் தேடி வந்து உண்ணும்.
அதிகாலை எழுந்து ஒரு மனதுடன் தனக்குச் சிறந்த கணவன் கிடைக்க வேண்டும் என்ற ஆழ் மனது நம்பிக்கையுடன், பரிசுத்தமான காற்றை சுவாசித்து விரதம் மேற்கொள்ளும் போது அப்பெண்ணிடமிருந்த எதிர்மறை எண்ணங்கள் விலகி, மன ஆரோக்கியம் மேம்பட்டு அவள் நினைத்த காரியம் கைகூடும்.
மார்கழி மாதம் எல்லா தெய்வங்களும் சிறப்பாக வணங்கப்படுகிறார்கள். அதில் சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனமும், ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியும் மார்கழி மாதத்தில் நடைபெறும் மிக முக்கியமான விசேஷங்கள் ஆகும்.
Comments
Post a Comment